அரசியல்

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி

கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

நண்பா நண்பீஷ் ரெடியா இருங்க.. திமுகவில் இணைந்த தவெக பிரபலம் வைஷ்ணவி
prominent tvk party former member Vaishnavi joined DMK party
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கியது முதலே, விஜய்-க்கு ஆதரவாகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகவும் இணையதளத்தில் பேசி வந்தவர் வைஷ்ணவி. சமூக வலைத்தளங்களில் பிரபலமான நபராகவும் மாறினா. ஆனால், தொடர்ந்து கட்சி பணிகளில் இவரை கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் புறக்கணித்து வந்தனர். இதனால், மனமுடைந்த வைஷ்ணவி தவெகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு,

”நான் கடந்த மே 3 ஆம் தேதி தவெகவில் இருந்து விலகினேன். நான் ஒருபோதும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது. எனது நோக்கம் சமூக பணி செய்வதே. தினமும் மக்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்துவிடமுடியாதா? என்றே நான் என் தினப் பொழுதை கடந்து வருகிறேன். தவெகவில் இருந்து விலகிய போதும் கூட எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தினமும் என்னால் முடிந்த மக்கள் பணியைச் செய்து வந்தேன்.

தவெகவில் இருந்து விலகியவுடன் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தபோதும், நான் உடனே எந்த முடிவையும் எடுக்கவில்லை. என் அம்மா திமுகவில் கடந்த 15 வருடங்களாக களப்பணி செய்து வந்தார். நான் தவெகவில் இணைந்த சில மாதங்களுக்கு பிறகு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் எனது அரசியல் பயணத்திற்காகவும் என் அம்மா தன்னுடைய அரசியல் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருந்தார். ஆனால் நான் படும் கஷ்டங்களைக் கண்டு எனது தாயும் மனஉளைச்சலுக்குத் தள்ளப்பட்டார்.”

திமுகவில் இணைய முடிவு:

”இப்போது நான் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றேன். எனது சமூகப்பணி தொடர, நானும் எனது குடும்பமும் பாதுகாப்பாக இருக்க, தெளிவான, மக்களுக்கான அரசியலைக் கையில் எடுக்கவேண்டும் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்துள்ளேன்.

தமிழக வளர்ச்சிக்கு குறிப்பாக பிறக்கும் குழந்தை தொடங்கி, மழலை பிள்ளைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள். குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள். மாற்றுத்திறனாளிகள், அனைத்து துறை அரசு ஊழியர்கள் என எல்லா தரப்பிற்குமான அரசாக தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, கல்வியில் வளர்ச்சி. புதிய வேலைவாய்ப்புகள் என மற்ற மாநிலத்திற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த ஆட்சியை காட்டிலும் தற்போது திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றப்பிறகும் தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
நான் தவெகளில் இருக்கும்போது திமுகவின் மீது கடுமையாக விமர்சனங்களை வைத்திருக்கிறேன் ஆனால் ஒருபோதும் என்னையோ என் குடும்பத்தையோ தனிப்பட்ட முறையில் அவதூறுகள் பரப்புவது. மிரட்டுவது என எதுவும் நடந்தது இல்லை. எனது கருத்தை கருத்தியலாக எதிர்கொண்டனர். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாகவே அமைந்தது.

களத்தில் சந்திப்போம்:

ஆனால் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் என்னையும் என் குடும்பத்தையும் தரகுறைவாக சமூக வலைதளங்களில் பேசி வருவதையும் நான் பார்த்தேன். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்றே ஒன்றுதான் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பீஷ் கருத்தை கருத்தியலாக எதிர்கொள்வோம். களத்தில் சந்திப்போம்.
இனி எனது சமூகப்பணி முழு வீச்சுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் செய்துகொண்டு இருக்கும் மக்கள் பணிக்கு எந்த இடையூறும் வராது, நீங்கள் தொடர்ந்து களத்தில் இருந்து செயல்படுங்கள் என நம்பிக்கை கொடுத்த முன்னால் அமைச்சர், மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி அண்ணன் அவர்களுக்கும். மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் , தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அண்ணன் . கவுண்டம்பாளையம் பகுதிச் செயலாளர் சரத்விக்னேஸ் அண்ணன் , கவுண்டம்பாளையம் வட்டக் கழக செயலாளர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இணைந்த வைஷ்ணவியினை விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் சமூக வலைத்தளத்தில் தற்போது விமர்சித்து வருகின்றனர்.