அரசியல்

நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்
Nainar Nagendran and O.Panner Selvam
பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேறிய நிலையில், “பிரதமர் மோடியை சந்​திக்க அனு​மதி தரவில்லை என்​ப​தால்​தான், கூட்​ட​ணி​யில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளி​யேறிய​தாக அவர் கூறு​வது பற்றி எனக்​குத் தெரி​யாது. என்​னிடம் சொல்​லி​யிருந்​தால், நான் பிரதமரை பார்க்க அனு​மதி வாங்​கித் தந்​திருப்​பேன்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எந்த பதிலும் அளிக்கவில்லை

ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் உண்மை நிலையை விளக்கினார். அவர், "நயினார் நாகேந்திரனை ஆறு முறை செல்போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் அனுப்பியும் அலட்சியம்?

"இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம் மற்றும் பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஜூலை 24 ஆம் தேதி அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் தொலைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் அவர் செய்யவில்லை" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நயினார் உண்மையை பேச வேண்டும்

"இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.