அரசியல்

"கரூர் துயரச் சம்பவம் விபத்து அல்ல.. முழுமையாக விசாரிக்க வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Edappadi Palaniswami
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவம் ஒரு விபத்து அல்ல என்றும், சரியாகத் திட்டமிடத் தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறைவாலும் நிகழ்ந்த நிர்வாகச் சீர்கேடு என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசைக் கண்டிக்கத் திராணியில்லாமல் ஏதோ இந்தச் சம்பவத்தில் அரசுக்குத் தொடர்பே இல்லை என்பது போலப் பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், அக்டோபர் 4ஆம் தேதி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவரது 'எக்ஸ்' தளப் பதிவில் வலியுறுத்தினார்.

பத்திரிகை செய்தியும் மக்களின் கருத்தும்

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், "ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியில் "Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாகத் திட்டமிடத் தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறைவாலும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக அச்செய்தி கூறுகிறது.

இந்தச் செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்தத் துயரச் சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது.

அனுமதிக்கப்பட்ட நேரமும் அலட்சியமும்

அப்பகுதியில் வசிக்கும் சீதாராம் என்பவர் தெரிவித்ததாகச் செய்தியில், "கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர். மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்பக்கூட இடமில்லை" என்று சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிப் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களைக் கூட்டப் பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன்? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயமாக உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 'லில்லி' என்பவர் கூறும் போது, "விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்துவிட்டதாகவும்" கூறுகிறார்.

அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர், "மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக" கூறுகிறார்.

ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும் கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா? இதில் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றியெல்லாம் எந்தப் பாதுகாப்புத் திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழத்தானே செய்யும்.

காவல்துறையின் அலட்சியம்

எல்லாவற்றிற்கும் மேலாக, அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல்துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதைக் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது" என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

"ஈரோட்டில் இருந்து வந்து உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறுவது, "ஒரு சில காவலர்களே சாலையோரம் நின்று இருந்தனர். பல காவலர்கள் வெளி வளையத்தில் போக்குவரத்தைச் சரி செய்தனர். 10 முதல் 15 காவலர்கள் வரை மட்டுமே வாகனத்தை ஒட்டியும், முன்னும் நடந்து வந்தனர். அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்திருந்தால், இந்தத் துயரச் சம்பவம் தவிர்த்திருக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கள நிலவரப்படி கூட்ட இடத்தில் போதுமான காவலர்களைக் கொண்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசு தவறிவிட்டது என்பது தான் இதன் மூலம் தெரிகிறது. மேலும், விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் காவலர்கள் உள்ளே கொண்டு வரவும் அதைப் பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில் பொதுமக்களைப் பாதுகாப்பதில் காட்டவில்லை என்பது தானே இதன் மூலம் தெரிகிறது.

காவலர்களின் எண்ணிக்கை குழப்பம்

கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாகக் கூறுகிறார். இது ஒருவேளை norms ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு எண்ணிக்கையை அவர் குறிப்பிடவே இல்லை.

உண்மையில் எவ்வளவு காவலர்கள் கூட்ட நிகழ்வுக்குப் பணியமர்த்தப்பட்டனர் என்பதை ஏன் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்தச் சம்பவ நிகழ்வின் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் குறிப்பாக கூட்டம் நடந்த இடத்தில் அதிகமாகக் காவலர்கள் காணப்படவில்லை என்றுதான் மக்கள் பேசுகின்றனர்.

இந்தத் துயர சம்பவத்திற்குச் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட தவறிய மாநில அரசின் தவறுகளை மறைத்து இந்த அரசைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பேசும் பக்க வாத்தியங்கள் இந்தச் செய்தியை மீண்டும் படித்து உண்மையைப் புரிந்து நடுநிலையோடு பேச வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.