அரசியல்

"விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம்"- டிடிவி தினகரன்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளனர்.


Vijay - TTV Dhinakaran
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின்தலைவர் விஜயைக் கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், இது பின்னாளில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்துக் கருத்து

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "கரூர் சம்பவத்துக்குத் த.வெ.க. தலைவர் விஜய் தார்மீகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீகப் பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜயைக் கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானமாகச் செயல்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் 50 ஆண்டுகால அனுபவமிக்கத் தலைவர். நான் நியாயமான விஷயத்தைக் கூறினால், முதல்வருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறுகிறார்கள். அனைத்துக் கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்துத் தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் தி.மு.க.வையும் பாதிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரைச் சுட்டுக் கொன்றனர். அப்போது அந்தத் துறைக்குத் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாரா?" என்றும் வினவினார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்

கரூர் விவகாரத்தைக் காரணம் காட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி த.வெ.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

"த.வெ.க.வை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக, கரூர் துயரத்திற்குக் குள்ளநரித்தனமாக ஆட்சியாளர்கள்தான் காரணம் என எடப்பாடி குற்றச்சாட்டை முன்வைக்கிறார். நாகரீகம் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேசுகிறார். இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருங்கள்" என்று அவர் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவம் ஒரு விபத்துதான் என்றும் இதில் யார் மீதும் பழிபோட முடியாது என்றும் அவர் கூறினார்.