அரசியல்

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஆளுநரின் செயல் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. மேலும், முதல்முறையாக மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு காலக்கெடு விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோத உட்பட 10 மசோதாக்களுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததால் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.



இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உதகையில் வரும் 25, 26-ஆம் தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், பல்கலைக் கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் எனவும் தெரிவித்திருந்தது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துணைவேந்தர் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், உதகையில் வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைப்பார் என்றும் இந்த மாநாட்டிற்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.