அரசியல்

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்
PMK founder Ramadoss At pressmeet in Thailapuram
பா.ம.க.வில் முகுந்தனால் ஆரம்பித்த பஞ்சாயத்து, அன்புமணியின் தலைவர் பதவியைப் பறிக்கும் அளவிற்குச் சென்றது. கட்சி யார் கண்ட்ரோலில் உள்ளது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள சூழ்நிலையில், பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்ற நிலையில், யப்பாடா..பிரச்சினை ஓய்ந்தது போல என பெருமூச்சு விட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ராமதாஸ்.

மைக் ராமதாஸ் பக்கம் வந்ததும் மறைமுகமாக அன்புமணியை சாடி தன் மனதிலிருந்த கருத்துகளை பறக்கவிட்டார். இந்த மாநாட்டிலும் அப்பா – மகன் இடையேயான பிரச்னை மேடையில் வெளிப்பட்டதால் பாமகவினர் கடும் அப்செட்டாகினர்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராமதாஸ், கண்ணீர் மல்க பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு-

”6 வருஷத்துக்கு முன்னாடி பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வின் போது டெல்லிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பும் போது, இந்த கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அண்புமணி கூறியபோது இரண்டு சொட்டு கண்ணீர் வடித்தேன். ஆனால், நான் பெரிதாக எதுவும் அப்போது பேசவில்லை.

அன்புமணி பொய்களை கூசாமல் பேசுவார். அதில் இரண்டு மட்டும் சொல்கிறேன். 108 பேர் மொத்த மாவட்ட செயலாளர்கள். மே-16 ஆம் தேதி நான் கூட்டிய கூட்டத்திற்கு 8 பேர் மட்டுமே வந்தனர். மீதமுள்ள 100 பேரிடமும், அன்புமணி போன் செய்து “என்னை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க போகிறார், நீங்கள் போகதீங்க” என சொல்லியுள்ளார். அதனால், அவரின் பேச்சைக்கேட்டு 100 பேர் வரவில்லை. 8 பேர் மட்டுமே வந்த நாளே நான் செத்து போய்விட்டேன். இரண்டாவது பொய், நேற்று சமூக ஊடக அணி கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வருகைத் தருபவர்களை நான் 6 பேர் வச்சு அடிக்கப்போறேன் என கூசாமல் பொய் பேசியுள்ளார்.”

அன்புமணியை தலைவராக அறிவிக்கக்கோரி என்னுடைய மருமகள் ஒரு வாரம் டைம் கொடுத்தார். பிறகு யாரோ நேரம் சரியில்லை என்று கூற, ஒன்றரை மாதம் போகட்டும் என சொல்கிறார்கள் என என்கிட்ட வந்து சொன்னாரு. நானும் சரி என்றேன். அதன்பின்னர் தான் அவரே தலைவராக அறிவிக்கும் நிகழ்வு நடந்தது.

எனக்கு விருப்பமில்லாத போதிலும், கட்சியினரின் வற்புறுத்தலால் அன்புமணிக்கு கேபினேட் அமைச்சர் பொறுப்பை வாங்கி கொடுத்தேன். அதிமுகவுடன் கூட்டணி வைக்க நான் விருப்பப்பட்டேன்.எடப்பாடியும், சி.வி.சண்முகத்திட சொல்லி கூட்டணி தொடர்பான வேலைகள் நடைப்பெற்றது. திடீரென ஒருநாள் வந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அன்புமணி என்னை வற்புறுத்தினார். ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 3 இடங்களாவது எங்களுக்கு கிடைச்சிருக்கும். அதிமுகவும் 6-7 இடங்கள் கூடுதலாக ஜெயிச்சிருக்கும். எங்களது சின்னமும் பறிப்போயிருக்காது. பாமக-அதிமுக ஆரம்பக்காலம் முதலே ஒரு இயற்கையான கூட்டணி.

அன்புமணி-செளமியா இரண்டு பேரும் கால்களை பிடிச்சு அழுவுறாங்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று. இதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி குறிப்பிட்டார். எனக்குத் தெரியாமலேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்க சௌமியா அனைத்து வேலைகளையும் செய்துவிட்டார். அடுத்த நாள், என் வீட்டு முன்பு பாரத் மாதாகி ஜே என பாஜகவினர் வந்து நிற்கிறார்கள். அதன்பின் நிறைய நடந்தது. அதெல்லாம் சொல்ல விரும்பவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸின் பேட்டி பாமக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.