இந்தியா

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. சில விதிகளுக்கு இடைக்கால தடை!

வக்பு திருத்த சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் சில விதிகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. சில விதிகளுக்கு இடைக்கால தடை!
Supreme Court refuses to stay the Waqf Amendment Act
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சில முக்கிய விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்

வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம், மனுதாரர்கள் கோரிய சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் பின்வருமாறு:

ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.