சினிமா

‘என்ன தவம் செய்தேன்..’ நடிகர் எஸ்.ஜே.சூர்யா உருக்கம்

“கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அனைவர்க்கும் நன்றி” என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘என்ன தவம் செய்தேன்..’ நடிகர் எஸ்.ஜே.சூர்யா உருக்கம்
SJ Suryah
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் நடிகர் என்ற அதில் முதல் வரிசையில் எஸ்.ஜே.சூர்யா இடம் பிடித்திருப்பார். அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

இயக்குநர் அருண் இயக்கத்தில் வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தியிருப்பார். இதைத்தொடர்ந்து, அவர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ , கார்த்தியின் ‘சர்தார் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நீண்ட கால தனது கனவு படத்தை இயக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா அறிவித்தார். அவர் இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

‘கில்லர்’ படத்தின் பூஜை கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. அதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, நடிகர் கார்த்தி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

வாலி, குஷி, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக 2015ம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவரே படத்தை இயக்கி நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் அன்பு குறித்துஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கில்லர்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் என் மீது அளவற்ற அன்பை பொழிந்த அன்பும் ஆருயிருமான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. ‘என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு’. 'கில்லர்' திரைப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்!" என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.