சினிமா

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்
Vishnu Vishal Brother Rudhra Debuts Oho Enthan Baby movie audio launch
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ.

இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விஷ்ணு விஷாலின் குடும்பக் கதை:

நிகழ்வில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், " 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி கொள்வார்கள். அப்படியான சினிமா பைத்தியம் அவர்கள்.

இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு எனது பெரியப்பாவிற்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அவருடைய பையன் தான் ருத்ரா. ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இந்த கதை மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் ஃபோர்ஸ் செய்தார். இன்று இந்த மேடையில் நான் இருக்க காரணமே எனது பெரியப்பா தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்" என்றார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்றாலே வெற்றி:

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், "டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்றாலே வெற்றி படங்கள்தான். அந்த வரிசையில் இந்த படமும் உங்களுக்கு வெற்றியாக அமையும். விஷ்ணு விஷால் சொன்ன கதை எமோஷனலாக இருக்கிறது. இதையே ஒரு படமாக எடுக்கலாம். நான் என் குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் தான் சினிமாவுக்குள் வந்தேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் கதை எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "விஷ்ணு விஷால் தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று என்னை ஒருமுறை சந்தித்தபோது சொல்லியிருந்தார். இப்பொழுது மேடையில் அவரது கதையை கேட்ட பின்பு அந்த வார்த்தையின் அர்த்தமும் கனமும் புரிகிறது. அவரது வாழ்க்கையின் நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது எங்களுக்கும் அது மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களின் ரிதமும் நண்பர்களை போலவே இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

ஞாபகத்திற்கு வந்த 'வானத்தை போல' படம்:

நடிகர் கார்த்தி பேசுகையில், "விஷ்ணு விஷால் மேடையில் சொன்ன கதையை கேட்ட போது 'வானத்தை போல' படம் போல இருந்தது. அந்த படத்தை போல உண்மையில் இருப்பார்களா என்று நினைத்தேன். ஆனால், இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்! அப்பா நம்மை கையில் தூக்கி வைத்திருந்தால் அண்ணா தோளில் தூக்கி வைத்திருப்பார். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தேன். நான் புதிதாக திரைத்துறையில் நுழையும் பொழுது அத்தனை பேர் என்னை வாழ்த்தினார்கள், அன்பு கொடுத்தார்கள். அந்த அன்பை திரும்ப கொடுக்கவே இங்கு வந்தேன். ரசிகர்கள் தியேட்டரில் ஜாலியாக இருக்கவே வருகிறார்கள். வெற்றிமாறன் சார் தான் சீரியஸான படங்கள் எடுக்கும் டிரெண்டை உருவாக்கி விட்டார். அதேபோல இயக்குநர் கிருஷ்ணாவும் நல்ல நடிகர். இயக்குநராக அவருக்கும் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்".

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் பேசுகையில், "நடிகனாக ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது இயக்குநர் ஆனது வரை என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நான் நடிகனாக இருந்த பொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இயக்குநரான பின்பு என்னுடைய படம் தான் பேச வேண்டும். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஜூலை 11 அன்று திரையரங்குகளில் பாருங்கள். பொதுவாக, இயக்குநர் தான் நடிகருக்கு கதை சொல்வார்கள். ஆனால், எனக்கு இங்கு ருத்ரா தான் கதை சொன்னார். ஒரு நடிகராக தன்னை சிறப்பாக ருத்ரா தயார் செய்து இருக்கிறார். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார். மிதிலாவும் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்".

கார்த்தி சாரை பார்த்து வந்த ஐடியா:

நடிகர் ருத்ரா பேசுகையில், "இந்த தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன். கனவு நனவாகி விட்டது. அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது. இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்றார்.