சினிமா

விடாப்பிடி கமல்.. கொதிக்கும் கன்னட அமைப்பு: களமிறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்

கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

விடாப்பிடி கமல்.. கொதிக்கும் கன்னட அமைப்பு: களமிறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்
south indian artistes association extend supports to kamal
கன்னட மொழியினை கமல் இழிவுபடுத்தியதாக கூறி கர்நாடகவில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்பினர் கூறியுள்ளனர். மன்னிப்பு கேட்கவில்லை என்றால், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக்ஃலைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சில கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதற்கு மத்தியில், “நான் தவறாக பேசவில்லை என்ற போது, மன்னிப்பு கேட்க முடியாது” என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில், கமல் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு-

அமரர்.டாக்டர் ராஜ்குமார்- கமல் இடையேயான உறவு:

”உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளி.

ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று கிளாப்' அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே அமரர். டாக்டர் ராஜ்குமார் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல் ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது. கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.ராஜ்குமார் அவர்களைத் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமார் அவர்களைத் தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல் ஹாசன்.

'தக் லைஃப்’ இசை வெளியீட்டு நிகழ்வு:

'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார் நெகிழ்ச்சியுடன் சில நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அந்த நெகிழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய கமல்ஹாசன் அவர்கள், டாக்டர்.ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும் சிவராஜ்குமார் அவர்கள் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக 'அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார் என்னும் பொருள்பட பேசினார்.

கமல்ஹாசன் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான குழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர்.

உண்மை இவ்வாறு இருக்க அதற்கு மாறாக கமல் ஹாசன் அவர்கள் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து, தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.

கன்னட திரையுலகிற்கு வேண்டுக்கோள்:

சுய ஆதாயங்களுக்காக குறிப்பிட்ட சிலர் கமல்ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும் வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.

கர்நாடக மாறிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசன் அவர்களது உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்" என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.