சினிமா

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்
Vishnu vishal - Rudhra
தமிழ் சினிமாவில் தன்னிச்சையான பாதையைத் தேர்ந்தெடுத்த ஒரு நடிகர் என்றால், அது விஷ்ணு விஷால்தான். 'ராட்சசன்', 'முண்டாசுப்பட்டி', 'ஜீவா' என ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறிய கதைகளில், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தவர். இப்போது 'ஓஹோ எந்தன் பேபி' என்ற நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடித்திருக்கிறார். படம் பற்றியும் தன் தம்பி ருத்ராவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் குமுதம் இதழுக்கான சிறப்பு நேர்காணலில் மனம் திறந்து பேசினார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தைப் பற்றி?

"இது என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பத்தாவது படம். இந்த 'ஓஹோ எந்தன் பேபி' படம் மூலம் என்னுடைய தம்பி நடிகராக அறிமுகமாகிறார். மேலும், கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகிறார்."

படத்தின் கதை என்ன?

"பொழுதுபோக்கான காதல் காட்சிகள் நிறைந்த படம். என் தம்பி ருத்ரா படத்தில் உதவி இயக்குநராக நடிக்கிறார். நான் விஷ்ணு விஷால் ஆகவே நடிக்கிறேன். என்னை வைத்து அவர் எப்படி படமெடுக்கிறார் என்பதுதான் கதை."

படத்தின் தலைப்பை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

“கிருஷ்ணா என்னிடம் ஒரு கதை சொன்னார். மிகவும் அற்புதமான கதை. அதைக் கூறி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால், அதனுடைய பட்ஜெட் மிகப் பெரியது. ஆகையால், இன்னும் அந்தக் கதையை படமாக்க முடியவில்லை. அதுதான் மாடல் லவ். அந்தக் கதையை வேறு யாரிடமும் நாம் சொல்ல வேண்டாம், நானே இதில் நடிக்கிறேன் என்று கூறினேன்.

நீண்ட நாட்களாக ருத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்தக் கதாபாத்திரம் அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே போல, இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியது முழுக்க முழுக்க கிருஷ்ணாதான். அவருடைய இயக்கத்தின் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. கிருஷ்ணா 250 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார்.

நீங்களும் சூர்யா, கார்த்தி போல எப்போதுமே தம்பிக்காக படம் தயாரிப்பீர்களா?

இந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நாங்களும் அவர்கள் போலவே ஒற்றுமையாகத்தான் இருப்போம். நிச்சயம் வருங்காலத்தில் ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன்.

அடுத்து நீங்கள் என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

'தற்போது, 'இரண்டு வானம்' மற்றும் 'ஆரியன்' படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. 'ஆரியன்' படத்தில் இதுவரை இல்லாத ஒரு புதுமையான கதைக்களம் இருக்கும். அதேசமயம் ரொம்ப வலிமையானதாகவும் இருக்கும். அதைப் பற்றி அந்தப் படத்தின் அறிவிப்பு வரும்போது பேசலாம்" என்று தெரிவித்தார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிகராக அறிமுகம் ஆகும் 'ஓஹோ எந்தன் பேபி' படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

(குமுதம் கட்டுரை \ நேர்காணல்: நிதிஷ் )