ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!
Thiruparankundram Issue
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கோவில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த விவகாரம் தொடர்பான இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். "உண்மையிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு தரப்பு வாதங்கள்

பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மலையின் உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும் என்றும், தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது என்றும், 3 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதாகவும், எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1994-இலிருந்துதான் பிரச்சினை ஏற்பட்டது, தீபம் ஏற்றுவது குறித்துப் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 2014-இல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளின் கேள்வி மற்றும் பதில்கள்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வக்கீல், "மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மேலும் மலையில், நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்குச் சொந்தமானது; மற்றவை கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது" என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.