நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் நூல்கள்; ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் அணை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

Aug 22, 2024 - 20:26
Aug 23, 2024 - 10:16
 0
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் நூல்கள்; ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் நூல்கள்

அதில், “தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (22.8.2024) ஆணை வழங்கியுள்ளார்.

தமது 23-ஆம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன் முதலில் "முரசொலி" என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ஆம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி: பின் மீண்டும் 1953-இல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960- ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது. 

அனார்கலி, உதய சூரியன். உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ. சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம். சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை. தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்). மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். 

வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம். ஒரு மரம் பூத்தது. அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும்: ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம். தாய் காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும்: சங்கிலிச் சாமியார். கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை. தப்பிவிட்டார்கள். தாய்மை. நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை. பதினாறு கதையினிலே. நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது. மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 

எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு. ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் கருணாநிதி 75 திரைப்படங்களுக்குக் கதை. திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார். இவற்றைத் தவிர. தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார். 

மேலும் படிக்க: பட்ஜெட் ஃப்ரெண்ட்லி Moto G45 5G; விலை, அம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும். இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow