அரசியல்

சட்டப்பேரவை துண்டு சீட்டு விவாகரம் ! சபாநாயகர் அதிரடி பதில் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி ஒன்றில் அளித்த பதில்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

சட்டப்பேரவை துண்டு சீட்டு விவாகரம் ! சபாநாயகர் அதிரடி பதில் !
Speaker JCD Prabhakar Breaks Silence
சட்டப்பேரவையில் சமீபகாலமாக சில விவகாரங்கள் பேசுபொருளாகி வரும் நிலையில், அது தொடர்பான கேள்விகள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அவையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து எழுந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சட்டப்பேரவை நடவடிக்கைகள், அவையில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்கள் ஒவ்வொன்றும் அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

“எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்!” :

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களின்போது, தேவையான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக சட்டப்பேரவை அலுவலர்களிடம் இருந்து குறிப்புகளைப் பெறுவது வழக்கமான நடைமுறை என சபாநாயகர் தெரிவித்தார்.

அந்த வகையில், சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவாதம் எந்த ஆண்டில் சட்டப்பேரவையில் நடைபெற்றது என்பது குறித்து அவைக்குறிப்புகளில் இருந்து தகவல்களைத் தயாராக வைத்துக்கொள்ளுமாறு அலுவலர்களிடம் கேட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

விவாதத்திற்கு உடனடியாகத் தயாராக வேண்டியிருந்ததால், குறிப்பிட்ட தகவல்களின் தேதிகளைத் தெரிந்துகொள்ளவே அந்த விவரங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“துண்டுச்சீட்டு கொடுத்தார்கள்... அவ்வளவுதான்!” :

தனக்கு வழங்கப்பட்ட துண்டுச்சீட்டு தொடர்பாக விளக்கம் அளித்த ஜே.சி.டி. பிரபாகர், அது சட்டப்பேரவை அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் குறிப்பு மட்டுமே என தெரிவித்தார்.

மேலும், “எந்த துண்டுக்கும், எந்த சீட்டுக்கும் நான் அடிபணிய மாட்டேன்” என திட்டவட்டமாகக் கூறிய அவர், எந்த வகையான அழுத்தத்திற்கும் தான் பயப்படப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

“அவையை எப்படி நடத்த வேண்டும் என எனக்குத் தெரியும்!” :

சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்குவது, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என சபாநாயகர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கும் நேரத்தையும், ஏற்கெனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தையும் கருத்தில் கொண்டால், தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கு அது போதுமானதாக இருக்கும் என்பது தனது எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.

4 தொகுதிகளின் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனையில் :

இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா தொடர்பான விவகாரம் குறித்தும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசினார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், மீதமுள்ள நான்கு தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.