அரசியல்

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!
Edappadi Palaniswami
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று சட்டமன்றத்தில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த விவாதத்தில் அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளும் தரப்பிற்கு மக்கள் அளித்த வாக்கு சதவீதம் குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்தார். தமிழக மக்கள் 33 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக-விற்கு அளித்துள்ளதாகவும், மீதமுள்ள 66 சதவீத வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கே கிடைத்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் உண்மையான தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாக உள்ளதாக அவர் வாதிட்டார்.

அவை மரபும் அவைத்தலைவர் விளக்கமும்

அரசின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது எதிர்ப்பதா என்று வழிமொழிவதுதான் சட்டப்பேரவை மரபு என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இதற்குப் பதிலளித்த அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், இது அரசின் தீர்மானம் என்பதால் தனியாக வழிமொழியத் தேவையில்லை என்றும், உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய முழு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.

குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டு

அதிமுகவில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ-க்களில் ஒரு தரப்பிற்கு மட்டும் தவெக ஆதரவு அளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, இது 'குதிரை பேரத்திற்கு' வழிவகுக்கும் என எச்சரித்தார். மேலும், தமிழகம் இன்று பல துறைகளில் முன்னணி மாநிலமாகத் திகழ்வதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அடித்தளமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.