பாம் சரவணனின் மருத்துவ சிகிச்சை மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரால் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சுட்டு பிடிக்கப்பட்ட தனது கணவர் பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, பாம் சரவணனின் மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், துப்பாக்கிச் சூட்டில் தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
காயம் முழுமையாக குணமடையாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு இன்று மீண்டும் வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அதன் மீதான விசாரணையின் சரவணனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படட்டதாக அரசு கூறியதை அடுத்து அந்த மனு முடித்து வைக்கப்பட்டதாக கூறினார்.
எனவே, மீண்டும் அதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
மேலும், தண்டனை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?






