உலகம்

சிட்னியில் கோர சம்பவம்.. நிறைமாத இந்திய கர்ப்பிணி சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்து ஒன்றில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமன்விதா தாரேஷ்வர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிட்னியில் கோர சம்பவம்.. நிறைமாத இந்திய கர்ப்பிணி சாலை விபத்தில் உயிரிழந்த சோகம்!
Indian origin Pregnant woman killed in Sydney
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 14 ஆம் தேதி இரவு நிகழ்ந்த கோரமான சாலை விபத்து ஒன்றில், 8 மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமன்விதா தாரேஷ்வர் (33) மற்றும் அவரது வயிற்றில் இருந்த சிசு ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகப் பூர்வீகம் மற்றும் விபத்து நடந்த விதம்

கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமன்விதா தாரேஷ்வர், சிட்னியில் ஒரு ஐ.டி. சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்-ஆக (IT Systems Analyst) பணியாற்றி வந்தார். கடந்த 14 ஆம் தேதி இரவு, ஹார்ன்ஸ்பை (Hornsby) பகுதியில் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகனுடன் சமன்விதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ரயில் நிலைய கார் பார்க்கிங் நுழைவாயில் அருகே கியா கார் ஒன்று, சமன்விதா குடும்பம் சாலையைக் கடக்க வழிவிடுவதற்காக மெதுவாகச் சென்றது. எதிர்பாராத விதமாக, பின்னால் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார், இந்தக் கியா காரின் மீது மோதியது. மோதலின் வேகத்தில் கியா கார் முன்னோக்கிச் சென்று, சாலையைக் கடக்க முயன்ற சமன்விதாவின் மீது பலமாக மோதியது.

தாயும் சேயும் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த சமன்விதாவிற்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், வெஸ்ட்மீட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சமன்விதாவும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதிர்ஷ்டவசமாக, சமன்விதாவின் கணவரும், மகனும் விபத்தில் காயமின்றி உயிர் தப்பினர்.

இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க இருந்த நிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்தது. சமன்விதாவிற்கு நடந்த இந்த கோரா சம்பவம் அவரது குடும்பத்தை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.