உலகம்

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!

துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.

துபாய் விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்து: இந்திய விமானி உயிரிழப்பு!
Indian Air Force Tejas jet crashes at Dubai Airshow
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் போர் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து மற்றும் உயிரிழப்பு

கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய துபாய் விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21), பிற்பகல் 2.10 மணியளவில் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளதுடன், விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில், "துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவல்

கடந்த 2 நாள்களாக துபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் இடம்பெறவில்லை என்று கூறப்படும் நிலையில், இன்றைய அட்டவணையில் தேஜஸ் விமானம் 3 ஆவதாக இடம்பெற்றிருந்தது. தேஜஸ் விமானத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானது அங்கிருந்த பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் மிகவும் இலகுரக போர் விமானம் ஆகும். இது 2015 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.