தமிழக பட்ஜெட் 2026

மகளிர் உரிமைத் தொகை: "தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது"- அமைச்சர் தங்கம் தென்னரசு

"அதிகாலை வேளையில் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை:
Minister Thangam Thennarasu
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்துத் தனது உரையில் குறிப்பிட்டார். இத்திட்டம் நாடு முழுவதும் போற்றப்படும் ஒன்றாகவும், பிற மாநிலங்கள் பின்பற்றும் முன்மாதிரியாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரே நாளில் ரூ. 6,500 கோடி நிதிப் பகிர்வு

இத்திட்டத்தின் நிதிப் பரிமாற்றம் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, ஒரே நாளில் சுமார் ரூ. 6,500 கோடி நிதியைத் தமிழக அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, கடந்த 13 ஆம் தேதி அதிகாலை வேளையில் சூரியன் உதித்த மூன்று மணி நேரத்திற்குள், தமிழகத்தில் உள்ள 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மக்களின் மகிழ்ச்சியும் அரசின் விளக்கமும்

அதிகாலையிலேயே வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனதாக அமைச்சர் விவரித்தார். எதிர்காலத்தில் வரக்கூடிய நிதித் தடைகளை நிகழ்நேரத்திலேயே கணித்து, அவற்றை முறியடித்து மக்களைக் காக்கும் தலைவரைத் தமிழகம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவர் புகழ்ந்தார். கோடிக்கணக்கான மகளிர் சார்பாக இத்திட்டத்திற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி அமைச்சர் உரையாற்றினார்.