தமிழ்நாடு

மனைவி, மகள் கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்...கடைக்கு சென்று திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்

மனைவி, மகள் கண்முன்னே கணவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மனைவி, மகள் கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்...கடைக்கு சென்று திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்
மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாரத்
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). இவர் சென்னை தாம்பரத்தில் குடும்பத்தோடு தங்கி உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

மனைவி, மகள் கண்முன்னே கணவர் கொலை

விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் நேற்று (21.07.2025) இரவு குருவராஜபாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சாலையில் போடப்பட்டிருந்த தென்னை மட்டையினால் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் பாரத்தை அவரது மனைவி மற்றும் சிறுமியான மகள் கண்முன்னே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே பாரத் உயிரிழந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.மேலும் தடயவியல் நிபுணர் குழுவினர், மோப்ப நாய் சாரா உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர்.

பின்னர் வேப்பங்குப்பம் காவல்துறையினர் உயிரிழந்த பாரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.