தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!
election officers appointed for 234 constituencies
தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதன் விவரங்களைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் காலக்கெடுவும் ஆயத்தப் பணிகளும்

16-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு மே 10-ம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னர் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் விவரங்களைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகள் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒரு தொகுதிக்குக் குறைந்தபட்சம் 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியத் தொகுதிகளுக்கான அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியாக, கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக சேலம் கலால் துறை உதவி ஆணையர் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை, பண்டிகை, திருவிழா உள்ளிடவை தொடர்பான பட்டியலைத் தேர்தல் ஆணையம் தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் வெளியீட்டுத் தேதி

தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் கணக்கெடுப்பு பணி வரும் டிசம்பர் 11-ம் தேதி நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். திரும்பப் பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடனே வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பட்டியல், வரும் டிசம்பர் 11-ம் தேதிக்கு பின் இறுதி செய்யப்படும். எனவே, வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களை விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாத வகையிலும், எந்த ஒரு தகுதியற்றவரும் சேர்க்கப்படாத வகையிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.