தமிழ்நாடு

பாடகர் எஸ்.பி.பி நினைவிடத்தில் அனுமதி மறுப்பு – அஞ்சலி செலுத்த முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

பாடகர் எஸ்.பி.பி நினைவிடத்தில் அனுமதி மறுப்பு – அஞ்சலி செலுத்த முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 5ம் ஆண்டு நினைவு தினமான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா என பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் எஸ்பிபி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவிடம்

எஸ்பிபி நினைவிடம் கட்டுமான பணிகள் காரணமாக நினைவிடத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எஸ்பிபி-யின் நினைவிடத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் சிலர் அவர் பாடிய பாடல்களை பாடி நினைவு கூர்ந்தனர்.

ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த எஸ்பிபியின் ரசிகர் சாந்திராஜ் என்ற இளைஞர் எஸ்பிபி மீது வைத்துள்ள அன்பால் எஸ்பிபி பாடிய 188 பாடல்கள் வரிகளை எழுதி மாலையாக தனது உடலில் அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

நினைவு நாள் கூட எஸ்பிபிக்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாத வகையில், அவரது நினைவிடம் பூட்டப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவும், அவரது நினைவிடத்தை விரைந்து முடித்து அவரது பிறந்த நாளில் திறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.