தமிழ்நாடு

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

 ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா
1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கி, சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார்.


தீய அரசு திமுக

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்தியாவில் போதைப்பொருள் அதிகமாக உபயோகிக்கும் மாநிலமாக பஞ்சாப் இருந்தது மாறி, தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
போதைப்பொருளுக்கான செயல்படக்கூடியவர்கள் சென்டரல் ஸ்கூல், சிபிஎஸ்சி பள்ளி பயிலும் மாணவர்களை குறிவைத்து கொடுக்கின்றனர். தமிழகத்தின் அடுத்த தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இந்த தீய அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

கடந்த 7-ஆம் தேதி கோவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் தொடர்பு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் பாஜக இணைந்து செயலாற்றுகிறது. தமிழ்மொழியை தூக்கி நிறுத்திய கவிசக்கரவர்த்தி கம்பரின் பெயரை மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும். இல்லை என்றால், திமுக ஆட்சி தமிழ்விரோத ஆட்சி என்று பாஜக கூறும்.

வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

கோயில் பணத்தை திருடி முத்தமிழ் கடவுள் முருகன் மாநாடு என்று சொல்லி நடத்திய மாநாட்டு இறுதியில் துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, இது ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறினார். அப்படியெனில் எதற்கு கோயில் பணத்தை எடுத்தார்கள்? அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், உதயநிதிமீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இந்துக்களை சீண்டிபார்க்க தேவையில்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. கடலூர் மாவட்ட ரயில்விபத்து வேதனை அளிக்கிறது. விபத்திற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விபத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்

அஜித்குமார் மீது பொய்வழக்கு கொடுத்த நிகிதா என்ன ஆனார். அவர் எந்த அமைச்சர் வீட்டில் மறைந்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6,700 கொலைகள் நடந்துள்ளது. எந்த ஒருமனிதாபிமான உணர்வு இருக்கிற பொதுமக்கள் இந்த அரசை ஆதரிக்க மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிதான் தமிழக மக்களை காப்பாற்றும்” என தெரிவித்தார்.