தமிழ்நாடு

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!

பிரபல தனியார் வங்கியில், வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரூ. 4.36 கோடி அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் வங்கி மேலாளர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!
பிரபல தனியார் வங்கியில் ரூ. 4.36 கோடி மோசடி: நிர்வாக இயக்குனர், மேலாளர் மீதுவழக்குப்பதிவு..!
சமீப காலமாக தனியார் வங்கியில் வேலை பார்ப்பவர்களே வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்து அபகரிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை மோசடி செய்து வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றி அபகரித்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் வங்கி அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தங்கள் சேமிப்பை வைப்பு நிதியாக தனியார் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்தை வங்கியில் பத்திரமாக இருப்பதாக நினைத்து கவனிக்காமல் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் வங்கி அதிகாரிகள் சிலர் வைப்பு நிதி காலம் முடிவதற்குள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே பணத்தை திருடி ஏமாற்றுகின்றனர்.

அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வைப்பு நிதியாக வைத்த பணத்தை குறி வைத்து தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் கிளை வங்கி மேலாளர் செய்த மோசடி அம்பலம் ஆகியுள்ளது. தனியார் வங்கியின் சென்னை அண்ணா நகர் வங்கி கிளையில் கடந்த 2022 இல் அமெரிக்காவில் வசித்து வரும் 77 வயது மருத்துவர் மற்றும் தனது மனைவியின் பெயரில் வைப்பு நிதியாக 4 கோடியே 36 லடச்த்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளார். இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம், வைப்பு நிதி குறித்து ஆய்வு செய்த போது வைப்பு நிதி காலம் முடிவதற்கு முன்பாகவே முடித்து வைக்கப்பட்டு பணம் வேறு வங்கி கணக்குகளில் பரிவர்த்தனை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வங்கி கிளையில் புகார் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளாததால், ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தங்களது வைப்பு நிதியை மோசடி செய்த வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாக இயக்குனர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவர் புகார் அளித்துள்ளார். குறிப்பாக அவர்கள் அமெரிக்காவில் இருக்கிற காரணத்தினால் அவரது நண்பர் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதற்குண்டான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்த தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் இந்த மோசடி நடந்த காலகட்டத்தில் உள்ள அண்ணா நகர் வங்கி கிளை மேலாளர் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவின் மோசடி பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. தனியார் வங்கிக் கிளையில் எத்தனை வங்கி வாடிக்கையாளரின் வைப்பு நிதி இது போன்று மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.