தமிழ்நாடு

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

பிரபல பெண் அரசியல்வாதியின் பினாமி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது

ரூ.200 கோடி வங்கி மோசடி வழக்கு-சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதி பகுதியில் வசித்து வருபவர் தொழில் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி. இவர் மார்க் குருப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம், இசைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரஜினி ரெட்டி கல்பாக்கம் பகுதியில் உள்ள சொந்தமான இசை கல்லூரியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ரூ.200 கோடி மோசடி விவகாரம்

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் ராமகிருஷ்ண ரெட்டி வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக துப்பாக்கி ஏந்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது மார்க் குரூப் நிறுவனத்தின் ஜிஆர்கே ரெட்டி மற்றும் ரஜினி ரெட்டி ஆகியோர் மீது சுமார் 200 கோடி ரூபாய் வாங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


வங்கியில் வாங்கிய நோக்கத்திற்கு பதிலாக வேறு காரணங்களுக்காக கடன் தொகையை பயன்படுத்தி காரணத்தினால் சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கை அடிப்படையில் மார்க் குழுமம் தொடர்பான இடங்களிலும் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் ஏற்கனவே கடந்த 2017 ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அது 2 வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் ராமகிருஷ்ண ரெட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சிலருக்கு பினாமியாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் சொல்கிறது.

பிரபல அரசியல்வாதியின் பினாமி?

மார்க் குழும நிறுவனத்தை பண மதிப்பிழப்பின்போது 135 கோடி பணம் கொடுத்து பிரபல அரசியல்வாதி ஒருவர் வாங்கியதாக வருமானவரித்துறை சோதனைகளும் குறிப்பாக வருமான வரித்துறை அனுப்பிய 60 பக்க நோட்டீஸ் மூலமாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக 1600 கோடி ரூபாய் அளவிற்கு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி கொடுத்த விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது பெண் அரசியல் தலைவரின் பினாமி நிறுவனம் என தெரியவந்தது. பணமதிப்பிழப்பின் போது ரூ.115 கோடி வரை செலவழித்துள்ளது வருமான வரித்துறை விசாரணையில் அப்போது தெரியவந்தது.

இதேபோல் இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் அமலாக்கத்துறை 2- வது நாளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த மோகன்லால் காத்ரி தொடர்பான மற்றொரு அமலாக்கத்துறை வழக்கில் அதிகாரிகள் சோதனை மேல் மேற்கொண்டு வருகின்றனர்.

2வது நாளாக தொடரும் சோதனை

குறிப்பாக சென்னை புரசைவாக்கம் தம்புசாமி தெருவில் வசிக்கும் நகைக்கடை அதிபர் மோகன்லால் காத்ரி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் சவுக்கார்பேட்டை பகுதியில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இங்கும் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்கின்றனர்.

மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு வழக்குகளில் சென்னை, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் சோதனைக்கு பிறகு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள், மோசடியில் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் தெரியவரும் என அமலக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.