தமிழ்நாடு

அந்த மனசுதான் சார் கடவுள்: சாலையில் கிடந்த ரூ.2 லட்சம்.. கொத்தனாருக்கு குவியும் பாராட்டு

சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொத்தனார் வேலை செய்து வரும் நபர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனசுதான் சார் கடவுள்: சாலையில் கிடந்த ரூ.2 லட்சம்.. கொத்தனாருக்கு குவியும் பாராட்டு
சென்னை புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (54) என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு நங்கநல்லூர், பாலாஜி நகர் வழியாக வந்து கொண்டிருந்தபோது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது அதில் இரண்டு லட்சத்து 5 ஆயிரம் பணம் மற்றும் தனியார் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை இருந்துள்ளது.

இதனையடுத்து உமாபதி தனது மகள் கற்பகவல்லி என்பவரோடு மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்று அதனை ஒப்படைத்துள்ளார். காசோலையில் இருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்த போலீசார் பணத்தை இழந்தவர்களை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்ட போது அது நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா மீனாட்சி என்பவருடைய பணம் என்பது தெரியவந்தது.

பணத்தை மருத்துவர் கார்த்திகா மீனாட்சி என்பவரிடம் ஒப்படைத்த போலீசார், கொத்தனார் வேலை செய்து வரும் உமாபதி என்பவரை சால்வை அணிவித்து பாராட்டினர்.