தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
Husband sends mercenary troops to attack wife
சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெனாசிர் பேகம்(33). இவர் தி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக கணவர் ஜாகீர் உசேனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவர் ஜாகீர் உசேன் துபாய் நாட்டில் இருந்து வரும் நிலையில், இவர்களது விவகாரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி இரவு பெனாசீர் பேகம் தனது தாய் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஹெல்மெட் அணிந்து வந்து வழிமறித்த கும்பல் ஒன்று இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சூளைமேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், இதே போல தனது தந்தையின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அது தொடர்பாக கொடுத்த புகாரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முக அடையாளம் மற்றும் இருசக்கர வாகன பதிவெண்ணை வைத்து தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி வினோத் வயது 25 மற்றும் முகமது ஆதில்(25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த கூறியது அவரது கணவர் ஜாகீர் உசேன்தான் என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பெனாசிர் பேகம் விவகாரத்திற்கு சம்மதிக்காததால், ஜாகீர் உசேன் ஏற்கனவே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

துபாயில் உள்ள ஜாகீர் உசேன் மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாலிக் என்பவர் மூலமாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த கூறியதும், இதற்காக ரூ.30,000 வரை முன்பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வினோத், செல்வகணபதி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திற்கு வந்து பெனாசீர் பேகத்தை இரும்பு ராடால் தாக்கி இருசக்கர வாகனத்தை உடைத்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கணவர் உட்பட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.