தமிழ்நாடு

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வேட்டி சட்டையில் ஆளுநர் வருகை

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் அவதரித்த திருநாளை வைகாசி விசாக பெருவிழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பாலகன் வடிவில் இருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமியை வைகாசி விசாக திருநாளில் வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்தபடி ஆளுநர் சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றார்.


பூரண கும்ப மரியாதை

ஆலய நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு மேள தாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள விநாயகர், மூலவர் பாலசுப்ரமணியர், வள்ளி - மணவாளன், ஆதிமூலவர், பைரவர், கொடி மரத்தினை ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். அப்போது ஆலய நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு மாலை அணிவித்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தின் பூரணக் கும்ப மரியாதையுடன் சிறுவாபுரி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி சென்னை புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ஆளுநரின் வருகையை முன்னிட்டு சிறுவாபுரி கோவில் அருகில் உள்ள கடைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் இருசக்கர வாகனங்களும் செல் அனுமதி மறுக்கப்பட்டதால் சுமார் 2 கிமீ தூரம் பக்தர்கள் நடந்தே ஆலயத்திற்கு சென்றனர். ஆளுநர் வருகையை ஒட்டி சுமார் 30 நிமிடங்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநரின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் தலைமையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.