தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம்- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம்- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் 2 மசோதாக்கள் சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மசோதா ஆய்வின்றி எம்.எல்.ஏக்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஒப்புதல்

மேலும் கலைஞர் பல்கலைக்கழக சட்டமசோதா உள்பட 18 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநித்துவம் வழங்குவது தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளில், கிராம பஞ்சாயத்துகளில் 12,913 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவர். முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டிசம்பர் 3 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்திருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம்

இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநித்துவம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தங்களுக்கான உரிமைகள், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என கூறப்படுகிறது.