தமிழ்நாடு

“எட்டப்பன் துரோகி இல்லை; தவறான தகவல் பரப்பப்படுகிறது” – எட்டயபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

எட்டப்ப மகாராஜா பற்றி அரசியல், பாடப்புத்தகம் என எதிலும் தவறாக சித்தரித்து இடம் பெறக்கூடாது என வலியுறுத்தல்

“எட்டப்பன் துரோகி இல்லை; தவறான தகவல் பரப்பப்படுகிறது” – எட்டயபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் சமஸ்தான மன்னர் குறித்து தவறான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்களை கூறி வருவதை கண்டித்தும், வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை வளாகத்தில் எட்டயபுரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எட்டையாபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னர் குறித்து களங்கம்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார். இதன் பின்னர் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “சினிமாவில் பேசியதை வைத்துக்கொண்டு வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால், கடந்த 2 தலைமுறைகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்.

முதலில் சினிமா என்று விட்டது இவ்வளவு பெரிய தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சிலர் இன்றைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்து பேசும் நிலை உள்ளது.
எட்டயபுரம் அரண்மனை வரலாறு, எட்டப்பர் பெயருக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான சிறப்பான வரலாறு என்ன என்பதை தெரியப்படுத்துவது எங்கள் கடமை. அதை தான் நாங்கள் செய்துக்கொண்டிருக்கிறோம்.

தவறாக சித்தரித்து இடம் பெறக்கூடாது

எட்டப்ப மகாராஜா பற்றி 10ஆம் வகுப்பு பாடத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மனு அளித்துதோம். அடுத்த கல்வி பருவத்தில் நீக்கி விடுவோம் என்று உறுதி அளித்தார்.

எட்டப்ப மகாராஜா பற்றி அரசியல், பாடப்புத்தகம் என எதிலும் தவறாக சித்தரித்து இடம் பெறக்கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவண காப்பகத்தில் உள்ளன. அந்த சமயத்தில் என்ன நடந்து. ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.

உண்மையான வரலாறு தெரியும்

எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்துப்பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன.அதை எடுத்து பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும்” என்றார்.