தமிழ்நாடு

'டிட்வா' புயல்: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

'டிட்வா' புயல்: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
TN Weather
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் மெதுவாக நகர்ந்து வருவதால், தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 28) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'டிட்வா' புயலின் தற்போதைய நிலவரம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக் கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று (நவம்பர் 27) காலை புயலாக உருவானது. ஏமன் நாடு பரிந்துரைத்தபடி இந்தப் புயலுக்கு 'டிட்வா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'டிட்வா' புயல் தற்போது சென்னைக்குத் தெற்கே 520 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 420 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது 4 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.

புயல் நகர்வும் வெள்ள அபாயமும்

இந்தப் புயல் வருகிற நவம்பர் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் மெதுவாக நகர்வதால் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய 19 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைக்கான ரெட் மற்றும் மஞ்சள் அலர்ட்டுகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்று, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்ககளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை ரெட் அலெர்ட்

நாளை (நவம்பர் 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.