தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்

அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

 அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்... அல்லோலப்படும் மக்கள்
அருப்புக்கோட்டையில் மாற்றப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மதுரை சாலையில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அங்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அதன் அருகிலேயே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

பேருந்து நிலையம் மாற்றம்

தற்போது இந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் சேர்த்து தரைதளம் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை பணிகள், முகப்பு அலங்கார பணிகள் போன்ற பணிகள் அங்கு நடைபெற இருப்பதால் இந்த தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் மதுரை சாலையில் உள்ள சிஎஸ்ஐ திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தற்காலிக பேருந்து நிலையம் மிக சிறியதாக இருப்பதால் அதிக பேருந்துகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் கழிப்பிடம், கடைகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை.

பொதுமக்கள் அவதி

சிறிய இடம் என்பதால் அங்கு பேருந்துகளை திருப்புவதற்கு ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். ஒரு சில பேருந்துகள் உள்ளே சென்று திருப்பி விட்டு மீண்டும் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முன்பு என்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால் இதுபோன்று பேருந்து நிலையங்களை அடிக்கடி மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.