அரசியல்

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சத்துணவு அமைப்பாளர் தற்கொலை வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
Why is the police being lax? Nainar Nagendran
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த பாரிஜாதம், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த பாரிஜாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது மரணத்திற்கு BDO, BDO மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டையில் செயல்பட்டுவரும் வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 30 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக நேர்மையுடன் பணியாற்றி வந்த பாரிஜாதம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் தனது மேல் அதிகாரிகள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மிகுந்த மன வேதனையளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசு அதிகாரிகளின் அராஜகம் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதற்கு இதுவும் ஒரு சான்று.

காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்?

தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களைத் தெளிவாக பாரிஜாதம் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும், திமுக அரசு இதுவரை அந்த அதிகாரிகளைக் கைது செய்யாமல் இழுத்தடிப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியின் அவல நிலை குறித்த உண்மைகளை வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களைத் தேடித் தேடி கைது செய்து பொய் வழக்கு போடும் தமிழக அரசின் ஏவல்துறை அத்தனை ஆதாரங்களும் மரண வாக்குமூலமும் தங்கள் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவது ஏன்?

கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறுகளை லாவகமாக மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என்பதும், அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய மக்களாக இருந்தால் கண்ணும் காதும் வைத்தாற் போல கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை மூடி விடுவார்கள் என்பதும் ஊரறிந்த விஷயம். ஆனால் 30 ஆண்டுகளாக அரசுக்காக உழைத்த பாரிஜாதம் மரணத்தை அப்படி இலகுவாகக் கடந்துவிட முடியாது.

எனவே, நேரடியாகவோ மறைமுகமாகவோபாரிஜாதமை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.