அரசியல்

"ஜனநாயகன்" விவகாரத்தில் மௌனம் கலைத்த விஜய்: முதல்வருக்கு நன்றி!

தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.


TVK Vijay
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுத்ததால், படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், தஞ்சை மேடையில் இது குறித்து விஜய் முதல்முறையாக பேசியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

தனது உரையில் இப்பிரச்சினை குறித்துப் பேசிய விஜய், "கரூரில் தொடங்கிய நெருக்கடி முதல் ஜனநாயகன் பட விவகாரம் வரை என் மீது பழிக்கு மேல் பழி போட்டார்கள். ஆனால், இக்கட்டான இச்சூழ்நிலையில் பலரும் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பட்டும் படாமல் பூசி மொழுகிப் ஆதரவு கொடுத்தார். அவருக்கும், ஆதரவு தெரிவித்த மற்ற அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ஏன் இந்த விமர்சனம்?

முன்னதாக, கரூர் விவகாரத்தின் போது "சி.எம். சார்" என்று வீடியோ வெளியிட்ட விஜய், தனது படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய அரசு சம்பந்தப்பட்டிருப்பதால், "பி.எம். சார்" என்று அழைத்து ஏன் வீடியோ வெளியிடவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன. பாஜாக-வை எதிர்க்க விஜய் அஞ்சுகிறாரா என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் விஜய் இன்று 'ஜனநாயகன்' பட விவகாரம் குறித்து முதல் முறையாக மேடையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.