அரசியல்

"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது சந்தேகம் தான்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

"காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Edappadi Palaniswami
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இன்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசின் புதிய ஓய்வூதிய அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா?

அப்போது அவர், “திமுக ஆட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேண்டுமென ஆசிரியர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணியில் சில கட்சிகள் வரும். அதை பகிரங்கமாக சொல்ல முடியாது. அதிமுக தலைமையில் அமைக்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.

பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு நாடகம்

தொடர்ந்து பேசிய அவர், "அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு நாடகம். ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்த திட்டத்தை அப்படியே பூசி நன்மை கிடைக்கிற மாதிரி ஒரு நாடகத்தை முதல்வர் அரங்கேற்றி இருக்கிறார். மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை தான் இந்த அரசும் அறிவித்திருக்கிறது. இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனக்கு தெரிந்த அளவுக்கு எதுவுமே புதிதாக இல்லை. அவர்கள் கேட்ட கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை. சில சங்கங்கள் ஆதரவு கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இதை ஏற்கவில்லை” என்று கூறினார்.

'எது நடக்குமோ அதை தான் சொல்வோம்'

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் வர வாய்ப்புள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “அதெல்லாம் கால சூழலுக்கு தகுந்த மாதிரி நடக்கும். எங்களை பொறுத்தவரைக்கும் எது நடக்குமோ அதை தான் சொல்வோம். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் திமுகவினர் ஓட்டுக்காக ஆட்சி செய்கிறார்கள். ஓட்டு வர வேண்டும், மக்களை ஏமாற்ற வேண்டும். அதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருகிறார்கள். அதன் பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள நிறைவேற்ற வேண்டுமென்று தான் களத்தில் போராடிட்டி இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.