அரசியல்

ஜி.கே.மணி தலைமையில் குழு: பாமகவை மீட்டெடுப்பேன்- ராமதாஸ் சபதம்!

அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.

ஜி.கே.மணி தலைமையில் குழு: பாமகவை மீட்டெடுப்பேன்- ராமதாஸ் சபதம்!
Ramadoss
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சி அங்கீகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமைக்கே ஆதரவாக முடிவெடுத்த நிலையில், பாமக-வை மீட்டெடுப்பதற்காக மூத்த நிர்வாகி ஜி.கே.மணி தலைமையில் ராமதாஸ் ஒரு குழுவை அமைத்துள்ளார்.

தந்தை - மகன் மோதல்

பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பினரும் தங்களுக்குச் சாதகமானவர்களை நிர்வாகிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதன் ஒரு பகுதியாக, ராமதாஸ் தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார்.

தேர்தல் ஆணையத்தின் முடிவும் அன்புமணிக்கு ஆதரவும்

கட்சி அங்கீகாரம் மற்றும் மாம்பழச் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகி இருந்தது. ஆனால், அன்​புமணி தலை​மையி​லான பாமக-வையே தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்​தது. அதோடு, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்​சி​யின் தலை​வ​ராக அன்​புமணி தொடர்​வார் என்றும், பாமக சார்​பில் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் ‘ஏ’ மற்​றும் ‘பி’ படிவங்​களில் கையெழுத்​திடும் அதி​கார​மும் அவருக்​குத்​தான் உள்​ளது எனவும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

குழு அமைப்பு

இந்த முடிவைத் தொடர்ந்து, கடலூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது" என அன்புமணிக்குச் சபதம் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பாமகவை மீட்டெடுப்பதற்காக, ஜி.கே.மணி தலைமையில் ராமதாஸ் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவில் சையது மன்சூர், சதாசிவம், அருள், முரளி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடர்பாக இந்தக் குழு பணிகளை மேற்கொள்ளும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.