அரசியல்

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்
vaigaichelvan pressmeet in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாநகராட்சி சீர்கேடு குறித்து அதிமுகவினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆர்ப்பாட்டம் நிறைவின்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

விசிக திருமாவளவன் சந்திப்பை குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. இது முதற்கட்டம், அடுத்தடுத்த கட்டத்தை விரைவில் பார்ப்பீர்கள்” என்று வைகைச் செல்வன் பதில் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ கைது மற்றும் விசாரணை குறித்த கேள்விக்கு, “புரட்சி பாரதம் கட்சியினை சேர்ந்த ஜெகன்மூர்த்தி அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதையோ, சட்டமன்ற உறுப்பினர் என்பதை கூடவோ கருத்தில் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என அரசு கூறுகிறது. ஆகையால் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றேன். இந்த வழக்கில் அடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பார்க்க வேண்டும். இதுக்குறித்து அதிமுக கழக பொதுச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்பதை தெரியப்படுத்துகிறேன்” என்று பதில் அளித்தார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் தலைமையில் பாஜக எப்படி செயல்படுகிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பா.ஜ.க எப்படி செயல்படுகிறது என்பது குறித்துக் கருத்து சொல்ல இயலாது. நல்லமுறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது, பலம் பெறுகிறது, பல பேர் வருவார்கள். இது குறித்து விரிவாகக் கழகப் பொதுச்செயலாளர் பிறகு கூறுவார்” என்றார்.

பா.ம.க நாள்தோறும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறது. அதில் அன்புமணி ராமதாஸ் தி.மு.க-வை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணி குறித்தெல்லாம் கழகப் பொதுச்செயலாளர் முடிவு செய்வார். ஆனால், பா.ம.க கட்சி உடைந்ததற்கு தி.மு.க-தான் காரணம் என்று அந்தக் கட்சியைச் சார்ந்த அன்புமணி ராமதாஸே குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதைத்தான் பார்க்க வேண்டும்” என்று அவர் பதிலளித்தார்.