இந்தியா

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

பெங்களூரு கூட்டநெரிசலில் உயிரிழப்பு: கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா
ஆர்சிபி வெற்றிக்கொண்டாடத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
ஐபிஎல்லின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி இந்தாண்டு கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து ஜூன் 4ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 30 ஆயிரம் பேர் கூட வேண்டிய இடத்தில் சில லட்சம் பேர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழப்பு

நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் ஸ்டேடியத்தில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்ததது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த கூட்ட நெரிசலில் 50 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தது. மேலும், பெங்களூருவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வேதனையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று ஆர்சிபி அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது, அதன் அறிக்கை அடுத்த பதினைந்து வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகம் மீது விமர்சனம்

கோப்பையை வென்ற ஒரு நாளிலேயே வெற்றி கொண்டாட்டங்களைத் தொடர்ந்ததற்காகவும், இவ்வளவு பெரிய நிகழ்வுக்குத் தேவையான போதுமான பாதுகாப்பை ஏற்பாடு செய்ய நிர்வாகத்திற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் போதுமான நேரத்தை மறுத்ததற்காகவும் ஆர்சிபி பரவலான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு திட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கு உரிமையாளர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இடையே சரியான ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, மும்பையில் லட்சக்கணக்கானோர் வீதிகளுக்கு வந்ததால் ஏற்பட்ட தடையற்ற வெற்றி அணிவகுப்பை அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.

நிர்வாகிகள் ராஜினாமா

இந்த நிலையில் வெற்றிக்கொண்டாட்டம் மறுபுறம் துக்க நிகழ்வாக மாறியுள்ளது ஆர்சிபி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜூன் 4 ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொர்டர்பாக 'தார்மீகப் பொறுப்பேற்று' கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ.சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெய்ராம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

தார்மீகப் பொறுப்பேற்பு

கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாகவும், எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தாலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாகவும், நேற்று இரவு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 06.06.2025 தேதியிட்ட கடிதம் மூலம் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.