சினிமா

நடிகர் விஷால் - லைகா நிறுவனம் வழக்கு.. ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - லைகா நிறுவனம் வழக்கு.. ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
Actor Vishal Case
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக (Deposit) செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி மற்றும் தனி நீதிபதி உத்தரவு

நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.29 கோடி கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்தக் கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி கடனை, 30% வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.

விஷால் மேல்முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் மேல்முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், ரூ.15 கோடி கடன் பெற்ற நிலையில், ஆண்டுக்கு 30% வட்டியுடன் திரும்ப செலுத்தப் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் எனக் கூறினார். வட்டித் தொகை மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், லைகா நிறுவனம் கூறுவதுபோல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்கத் தயாராக இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினர். மேலும், 30% வட்டி என்பது மிக அதிகம் எனவும், இப்படிச் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமர்வு பிறப்பித்த உத்தரவு

இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன், ரூ.10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்த விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.