ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரைப் பெருந்திருவிழாவிற்கான பணிகள் இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் இன்று காலை சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் மற்றும் ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்த கால் நிகழ்ச்சி தொடங்கியது. இதனையடுத்து மூகூர்த்க்கால்கள் கோவில் முன்பாக நடப்பட்டது. இந்த கொட்டகை மூகூர்த்த நிகழ்ச்சியில் மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, சித்திரை திருவிழா சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி என்பதை நிருபிக்கும் வகையில், கள்ளழகர் திருக்கோயில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய இரண்டு கோவில்களின் அறங்காவல்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டபோது கோவில் நிர்வாகத்தின் சார்பில் வெற்றிலைபாக்கு வழங்கி திருவிழாவிற்கான அழைப்புவிடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறக்கூடிய மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

இந்த மூகூர்த்த கால் நிகழ்ச்சியை தொடர்ந்து, சித்திரை பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். இதனையடுத்து மே 10 ஆம் மாலை 6 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும். 11 ஆம் தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும். இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 12 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும், இதனை தொடர்ந்து 13 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும், 14 ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 26 ஆம் தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 15 ஆம் தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று 18 ஆம் தேதிவரை சித்திரை திருவிழா நடைபெறும்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை சித்திரை பெருவிழாற்கான பணிகள் தொடங்கியது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.