கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Aug 12, 2024 - 19:41
Aug 13, 2024 - 09:35
 0
கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
கருணாநிதி நினைவு நாணயம்

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகக் கருணாநிதியின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி, திரைத்துறை சார்பில் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி எனப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. 

இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நினைவு நாணயம்’ வெளியிட ஒன்றிய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி கடிதம் எழுதினார். இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3ம் தேதி கலைஞரின் 100வது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. நாணயத்திற்கான நடைமுறைகள் மற்றும் பணிகள் சொன்ன நேரத்திற்குள் முடியாமல் போனதால் நாணயத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நாணயத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து நினைவு நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கெஜட்டிலும் நாணயம் அச்சடிக்க உத்தரவிடப்பட்டது. நாணயம் வெளியிடுவதற்கான அணைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா’ நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிடவுள்ளார். அதனை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொள்கிறார். விழாவில், திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியினர் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். விழா அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளை தற்போது தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.  

மேலும் படிக்க: பெண்களே உஷார்... ஒரு லிங்க் தொட்டால் மானம் போகும்

நாணயத்தின் சிறப்புகள்: 

கருணாநிதி நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகா தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, அதற்கு கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் கருணாநிதியின் நூற்றாண்டு (1924 - 2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருக்கும். 

35 கிராம் எடை கொண்ட இந்த ரூ. 100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ரூ. 2,500 விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow