“கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” - கவிஞர் வைரமுத்து பேச்சு

“பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Aug 7, 2024 - 11:52
 0
“கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை” - கவிஞர் வைரமுத்து பேச்சு
கவிஞர் வைரமுத்து

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு மனிதனுக்கு கல்லால் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். சொல்லில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இரண்டும் காலம் கடந்தும் நிலைக்கும். கலைஞருக்கு கல்லால் நினைவுச்சின்னம் எழுப்பி இருக்கிற அந்த இடத்தில் நாம் நிற்கிறோம். கவிஞர்கள் நாங்கள் சொல்லால் நினைவுச் சின்னம் எழுப்பி இருக்கிறோம். அதுதான் 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற தொகுப்பு. கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளுக்கு நாங்கள் அவருக்கு படைத்திருக்கும் காணிக்கை 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற நூல் தொகுப்பு. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூலை அவரது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதனை திராவிடக் கழக தலைவர் வீரமணி பெற்றுக்கொண்டார். இதிலுள்ள நூறு கவிதைகளும் வரலாற்று சிறப்புமிக்க கவிதைகள் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த நினைவிடத்துக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் பெருகி வருவதை பார்க்கிறபோது கலைஞரின் பெருமை கூடிக் கொண்டே போகிறது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்த கவிதை நூலில் இடம் பெற்றிருக்கிற முதல் கவிதை படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். நாமக்கல் கவிஞர்  ராமலிங்கம் பிள்ளை, டாக்டர் இலக்குவனார், குலோத்துங்கன் போன்ற அரிய பெருமக்களும், கவிஞர்களாகிய அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வாலி மேத்தா, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற பெண்பால் கவிஞர்கள் எழுதிய கவிதைகளும் இதில் இடம் பெற்றுள்ளது. கலைஞரைப் பற்றி சிலர் கருத்து தெரிவிக்கலாம். நல்ல சொற்களில் சொன்னால் நல்லது. நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றித் தவறாகப் பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை. வாழ்க கலைஞர்! வாழ்க கலைஞரின் புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் அரசு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி! 

இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருநாவுக்கரசு, தங்கபாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow