இளையராஜாவுக்கு பாராட்டு விழா: தேதி குறித்த ஸ்டாலின்.. எப்போது தெரியுமா?
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா ‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இவர் சமீபத்தில் 35 நாட்களில் சிம்பொனி இசையை உருவாக்கி முடித்ததாக கூறி அனைவரும் ஆச்சர்யப்படுத்தினார்.
‘வேலியண்ட்’ (Valiant) என பெயரிடப்பட்ட இந்த சிம்பொனி இசையை மார்ச் 8-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜா அரங்கேற்றினார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்த இளையராஜாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, லண்டனில் இருந்து திரும்பிய இளையராஜா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுக்குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 27) சட்டப்பேரவையில் இளையராஜாவின் திரையிசைப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Read more
ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!
What's Your Reaction?






