தமிழக பட்ஜெட் 2025:பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,760 கோடி நிதி ஒதுக்கீடு..!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு இரண்டாயிரத்து 150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை என்றும், மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
காலை உணவுத்திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாகவும், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 500 அரசுப் பள்ளிகளில் 50 கோடி ரூபாயில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார் .
இரண்டாயிரத்து 676 பள்ளிகளில் 65 கோடி ரூபாயில், திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும் என்றும், 56 கோடி ரூபாயில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
Read More: “செருப்புகள் ஜாக்கிரதை” காமெடி ஒரிஜினல் சீரிஸ் மார்ச் 28 முதல்..!
இரண்டாயிரம் பள்ளிகளில் 160 கோடி ரூபாயில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும், காலை உணவுத் திட்டம் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குள் உலக தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தவும், ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி 700 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.
புதிய படிப்புகள்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மேலும் 15 ஆயிரம் இடங்கள் அமைக்கப்படும் என்றும் வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் ஒரு லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்றும் ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
AI தொழில் நுட்பம்
குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரித்தார்.
What's Your Reaction?






