தமிழ்நாடு

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!
Class 12 student stabbed
சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதத்தால் விளைந்த கொடூரம்

சிவகங்கை அருகே உள்ள நிரஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் என்ற மாணவர், மல்லல் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னைத் தாக்கிய சஞ்சய் பிரசாத்தைப் பழிவாங்கும் நோக்கில், இன்று காலை வகுப்பறையில் சக மாணவர் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை மற்றும் விசாரணை

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரெனக் கைகலப்பாக மாறியது. அப்போது அந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சஞ்சய் பிரசாத்தின் நெஞ்சு மற்றும் முதுகு உள்ளிட்ட உடலில் நான்கு இடங்களில் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சஞ்சய் பிரசாத் மீட்கப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துச் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.