ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்-6) தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர் அந்நபர் சென்ற ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்ததும் இறங்கி சென்றுள்ளார். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதுடன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம்.. இளைஞர்கள் இருவரிடம் விசாரணை
இந்நிலையில், படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில், கர்ப்பிணிப் பெண், ஹேமராஜ் என்பவரின் புகைப்படத்தை அடையாளம் கண்டு கூறிய நிலையில் கே.வி.குப்பம் செல்லும் வழியில் ஹேமராஜனை போலீசார் கைது செய்தனர். 30 வயதான ஹேமராஜ் அடிக்கடி ரயில்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் பட்டியலில் உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஹேமராஜ் மீது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்ணை குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும், 2022 -ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?