தமிழ்நாடு

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு
Tamil Nadu Sets Up Committee for Annual Private Bus Fare Review
கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் இன்றளவும் பொதுமக்கள் தங்களின் பயணத்திற்காக பெரிதும் நம்பியிருப்பது பேருந்துகளை தான். தமிழக அரசும், மகளிருக்காண கட்டணமில்லா பேருந்து சேவையினை வழங்கி வருகிறது. இதற்கு மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

ஒருப்புறம் பேருந்து சேவைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என பொதுமக்களின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுப்புறம் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதுத்தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் செய்தித்தாள்களில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-

”தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு, சென்னை மற்றும் ஈரோடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கட்டண உயர்வு கோரி தொடுத்த வழக்கு எண்கள் W.P.No.27122/2024 மற்றும் 27127/2024-ல் மாண்பமை உயர் நீதிமன்றம் பிறப்பித்த 23.01.2025-ம் தேதி உத்தரவுபடி, தமிழ்நாடு அரசு, பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றினை நியமித்து ஆணைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து ஆணையர் அவர்களின் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவில் அவ்வப்போது உள்ள டீசல் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்விற்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு வழங்கிட குறியீட்டுமுறை (indexing method) வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைப்பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முதன்மை செயலாளர் / போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு நேரிலோ (அல்லது) மின்னஞ்சல் ([email protected]) / தபால் மூலமாகவோ இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற மூன்று வார காலத்திற்குள் அனுப்பி வைக்கலாம் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, முதன்மை செயலாளர் / போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்,சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்க வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம், தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து 4 மாதத்திற்குள் முடிவெடுக்குமாறு உயர்நிலைக்குழுவுக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.