தமிழ்நாடு

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?
மத்திய அரசு வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்திற்கு கரும்புக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி, ரூ.355 அதிகரித்து நிர்ணயித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 10.25% கரும்பு அடிப்படை மீட்பு விகிதத்தில் இருக்க வேண்டுமென நிபந்தனையும் விதித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பயனடையமாட்டார்கள் என கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”குஜராத் மாநிலத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.4,550, சட்டீஸ்கர் மாநிலத்தில் ரூ. 4,200, மகாராஷ்டிராவில் ரூ. 3,750, உத்தரபிரதேசத்தில் ரூ. 3,520, பீகாரில் ரூ. 3,490 வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் ரூ. 3,134 மட்டுமே தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, உற்பத்தி செலவு குறைவாக இருக்கிற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் மிக அதிகமான ஊக்கத்தொகையை கொடுத்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது, உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிற தமிழ்நாட்டில் மாநில அரசு டன்னுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு அதை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.”

தமிழகத்தில் குறைந்துப்போன கரும்பு சாகுபடி:

”தமிழ்நாட்டில் மொத்தம் 40 கரும்பு சர்க்கரை ஆலைகள் உள்ளது, 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் கரும்பு பயிரிடப்பட்டு வந்தது, தற்போது 5 லட்சமாக சுருங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சராசரி கரும்பு அடிப்படை மீட்பு விகிதம் 9.5% ஆக உள்ளபோது, மத்திய அரசு அறிவித்திருக்கிற கூடுதல் விலைக்கு 10.25 சதவீதம் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதால், தமிழ்நாட்டில் மத்திய அரசு அறிவித்திருக்கிற கூடுதல் விலையை கரும்பு விவசாயிகள் பெற முடியாது, எனவே இதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கரும்பு விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

எனவே மத்திய அரசு உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிற மாநிலங்களுக்கு உற்பத்தி செலவுக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்ச ஆதார விலையை கூட்டி தர வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ்நாட்டு விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய கோரிக்கை ஏற்கப்படாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரானதாகவே உள்ளது.”

மாநில அரசு வாக்குறுதியை காப்பாற்றுமா?

”மத்திய அரசு தற்போது கைவிட்டுள்ள நிலையில், மாநில அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிபடி கரும்பு டன்னுக்கு ரூ. 4,000 வரும் அளவிற்கு ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் காத்திருக்கிறார்கள். கசக்கும் கரும்பு விவசாயத்தை தமிழ்நாட்டில் மாநில அரசு அதிகளவிலான ஊக்கத்தொகை கொடுத்து மீட்க வேண்டுமென” தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.