தமிழ்நாடு

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை

"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை
Madurai Bench of the High Court
நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திருமணத்தை மறுத்ததால் அவர் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. நீண்டகால சம்மதத்துடன் கூடிய உறவில், உறவு முறிந்த பிறகு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணியும் புகாரும்

நெல்லையைச் சேர்ந்த இளைஞர் விஜய், கடந்த 2014-ஆம் ஆண்டு கல்லூரியில் படித்தபோது, தனது தாத்தா வீட்டிற்கு அருகிலிருந்த இளம்பெண்ணுடன் நட்பாகப் பழகி காதலித்து வந்துள்ளார். தாத்தா வீட்டிற்கு அடிக்கடி சென்ற இளைஞர், அந்தப் பெண்ணுடன் அவ்வப்போது உல்லாசமாக இருந்தனர். பின்னர், பல்வேறு காரணங்களால் இளைஞர் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதனால், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாலியல் உறவில் இருந்துவிட்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், இளைஞர் மீது தொடர்ச்சியான பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

வழக்கு ரத்து கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தன் மீது பதியப்பட்டு விசாரணையில் உள்ள இந்த வழக்கைத் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி இளைஞர் விஜய், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் போது மனுதாரர் வழக்கறிஞர் ஜெயமோகன், மனுதாரர் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப கட்டத்தில் அவர் எந்தவித ஏமாற்றும் எண்ணத்தில் இல்லை என்றும், காலம் கடந்து மனுதாரர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறி வழக்கைத் ரத்து செய்ய வாதிட்டார்.

நீதிபதி புகழேந்தியின் இறுதித் தீர்ப்பு மற்றும் கருத்துகள்

இந்த மனு மீதான விசாரணைக்குப் பின் நீதிபதி புகழேந்தி இன்று இறுதித் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், மனுதாரரும் இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாகப் பாலியல் உறவில் இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இந்த நீண்ட கால உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது, இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலான உறவு என்பதைக் குறிப்பதாகத் தெரிவித்தார். மேலும், நீதிமன்றம் தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை அறிந்திருக்கிறது என்றும், திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவில் ஈடுபட்டு நீண்ட காலத்திற்கு உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபடும்போது, அந்த உறவு முறிந்த பிறகு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு என்று நீதிபதி தெளிவுபடுத்தினார். இது போன்ற விஷயங்களை நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிப்பது சாத்தியமில்லை என்றும், தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

ஏனெனில், நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது என்றும், வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். எனவே, மனுதாரருக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்று கருதி, மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.