திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சொரககொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 54). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நாயுடுமங்கலம் ரயில்வே கேட் அருகே நேற்று (ஜூன் 17) காலை மர்ம நபர்கள் காமராஜர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுமன் உட்பட 7 நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று கலசப்பாக்கம் காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திருவண்ணாமலை - போளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், இந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.